காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 20,626 கன அடியாக அதிகரிப்பு. இன்று பிற்பகலில் நடப்பு ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும்.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,644கன அடியாக சரிந்தது. இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 20,626கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 900கன அடியிலிருந்து வினாடிக்கு 750கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியிலிருந்து 119.40 அடியாக உயர்ந்துள்ளது..அணையின் நீர் இருப்பு 92.51 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று மாலை மேட் டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ராஜசேகரன் செய்தியாளர், தலைமை செய்திபொருப்பாளர்.