இடங்கணசாலை கே. கே. நகரில், பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.


சேலம், சூரமங்கலம் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக காவேரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். காவேரி மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது அளவுக்கு மீறிய சொத்து சேர்த்திருப்பதாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்திற்கு புகார் வந்தன. இதனையடுத்து காவேரி தங்கி இருக்கும் இரும்பாலை, கணபதிபாளையம் வீட்டிலும், அவரது பூர்வீக ஊரான இடங்கணசாலை, கே. கே. நகர், கஞ்சமலையூர் பகுதியில் உள்ள பண்ணை வீடு மற்றும் விசைத்தறி கூடம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் முன்னிலையில் போலீசார் நேற்று சோதனை ஈடுபட்டனர். அப்போது பண்ணை வீட்டில் வசித்து வரும் உறவினர் வண்ணக்கிளி மற்றும் விசைத்தறி கூடத்தின் மேனேஜர் உள்ளிட்டோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை செய்து வந்தனர். சுமார் நான்கு மணி நேரம் விசாரணையில் எந்த ஒரு ஆவணங்களும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், காவேரியின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை செய்ய உள்ளனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

செல்வராஜ் , செய்தியாளர் இளம்பிள்ளை.